ஆழ்வார் திருமலைச் சோலையிலே
அழகிய தாமரைக் குளமுண்டு
அந்தத் தாமரைக் குளத்தினிலே
அழகாய்த் தாமரைப் பூப்பூக்கும்!
தாமரைப் பூத்தக் குளத்தினிலே
தவளை ஒன்றும் இருந்ததுவே;
தாமரைப் பூவின் அருகேதான்
தவளை தினமும் நீந்திவரும்!
தாமரைப் பூவின் அருகினிலே
தவளை நீந்திய போதினிலும்;
தாமரைப் பூவில் இருக்கின்ற
தேனைப் பற்றித் தெரியாது!
வனத்தில் எங்கோ சுற்றிவிட்டு
வந்தது தேனீ குளத்துக்கு;
அமர்ந்தது தாமரைப் பூவினிலே
அழகாய்த் தேனினை உறிஞ்சியது!
நித்தமும் தாமரைப் பூவருகே
நீந்திய அந்தத் தவளைக்கோ;
நத்தித் தேனையே அருந்துகிற
நலனை அறியா திருந்ததுவே!
சிறப்பு கொண்ட நல்லோரின்
சீரை அறிந்து எந்நாளும்;
முறையாய்ப் பயனைக் கண்டிடவே
முயற்சி செய்யார் மூடர்களே!
அருகினில் இருந்தும் தேனினையே
அறியா திருந்த தவளையென;
உறவென நல்லோர் நட்பினையே
ஓம்பார் பயனெதும் கொள்ளாரே!
ஒருநாள் கண்டே பழகிடினும்
உத்தம அறிவின் மேலோரை;
திருநாள் போலே நட்பாக்கிச்
சிறக்க முயற்சி கொள்ளணுமே!
அறிவில் சிறந்தோர் நட்பினையே
அற்புதப் புதையலாய்க் கொள்ளணுமே;
பெரிதென நாளும் அதைப்போற்றிப்
பெற்றிட வேண்டும் உறவினையே!